|
|
| கொமன்வெல்த் கூட்டத்தில் மனிதஉரிமை ஆணையாளர் பதவியை உருவாக்க சுமந்திரன் ஆதரவு - சிறிலங்கா எதிர்ப்பு |
| [ வியாழக்கிழமை, 13 செப்ரெம்பர் 2012, 00:59 GMT ] [ கார்வண்ணன் ] |
கொமன்வெல்த் அமைப்பின் சார்பில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, மனிதஉரிமைகளுக்கான ஆணையாளர் ஒருவரை நியமிக்கும் முயற்சியை கொமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்று வரும் கொமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கத்தின் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கோரியுள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்கள் குழுவின் ஒரு பிரதிநிதியாக தாம் கொமன்வெல்த்தின் இந்த முயற்சியை ஆதரிப்பதாக அவர் கூறியுள்ளார்.
பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தின் பி அறையில் நடந்த குழுநிலைக் கலந்துரையாடலில் பிரித்தானியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹியூ பேர்லியை அடுத்து பேசிய சுமந்திரன், இந்த நியமனம் அவசியமான தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பின் நடைபெற்று வரும் 58வது கொமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கத்தின் கூட்டத்தில் நான்கு கட்டங்களாக நடைபெற்றும் கலந்துரையாடலின் ஒரு பகுதியாகவே இந்தக் கருத்தரங்கு நடைபெறுகிறது.
சிறிலங்காவில் தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மை சமூகத்தின் தயவில் வாழவேண்டிய நிலையில் பிரித்தானியா விட்டுச் சென்றதாகவும் சுமந்திரன் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
“ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரின் போது, மனிதஉரிமை பணியாளர்கள் அச்சுறுதல்களை எதிர்கொண்டனர்.
இந்தக் கூட்டத்துக்குச் சென்றவர்கள் நாடு திரும்பும்போது அவர்களின் காலை முறிப்பேன் என்று சிறிலங்காவின் அமைச்சர் ஒருவரே பகிரங்கமாக எச்சரித்திருந்தார்” என்றும் சுமந்திரன் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையே கொமன்வெல்த் மனிதஉரிமை ஆணையாளர் பதவியை உருவாக்குவதற்கு சிறிலங்கா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்தப் பதவியை உருவாக்க இந்தியாவும் எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. |
|
|