|
|
| தமிழ் மக்கள் தமக்கான அரசியல் அதிகாரப் பகிர்வையே வேண்டி நிற்கின்றனர் - சுரேஸ் பிறேமச்சந்திரன் |
| [ வியாழக்கிழமை, 12 யூலை 2012, 06:33 GMT ] [ நித்தியபாரதி ] |

- "தமிழ் மக்கள் தமக்கான அரசியல் அதிகாரப் பகிர்வை வேண்டி நிற்கின்றனர். அவர்கள் அரசியற் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதில் உறுதியாக உள்ளனர். அவர்கள் தம்மைத் தாமே ஆள்வதை விரும்புகின்றனர். தமிழர்களின் இந்நிலைப்பாட்டை சிறிலங்கா அரசாங்கத் தலைவர்கள் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்" – சுரேஸ் பிறேமச்சந்திரன்.
- "எதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தமிழர்கள் தாமே தீர்மானித்துக் கொள்வதற்கான அனுமதி வழங்கப்படுவது சிறந்ததாகும். தமிழர்கள் தமக்கான அபிவிருத்திப் பணிகளை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும். இதனை சிறிலங்கா அரசாங்கம் ஏன் தீர்மானித்துக் கொள்ளவேண்டும்?" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
- "உண்மையில் இவ்வாறான நடவடிக்கைகள் சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து மேலும் மக்களை ஓரங்கட்டுகின்றது. இவ்வாறான நிலைப்பாடு தொடர்ந்தால் தமிழ் மக்களின் மனங்களை சிறிலங்கா அரசாங்கத்தால் வெற்றி கொள்ள முடியாது" எனவும் சுரேஸ் பிறேமச்;சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
- "நாடாளுமன்றத் தேர்தல்கள் மற்றும் உள்ளுராட்சி சபைக்கான தேர்தல்கள் போன்றன இதற்கான சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும். இத்தேர்தல்களில் தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமக்கான வாக்குகளை வழங்கினர் என்பதை அனைவரும் கருத்திலெடுக்க வேண்டும்" எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
- "இந்த அடிப்படையில், தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆள விரும்புகின்றனர். அவர்கள் தமது சொந்த இடங்களை அபிவிருத்தி செய்ய விரும்புகின்றனர். அவர்கள் தமக்கான சொந்தப் பாதுகாப்பை தாமே வழங்க விரும்புகின்றனர். அவர்கள் தமது பிள்ளைகளின் கல்வி, அவர்களது பொருளாதார வளர்ச்சி மற்றும் ஏனைய அனைத்தையும் தாமே கவனித்துக் கொள்ள விரும்புகின்றனர்" எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
- தற்போது தமிழ் மக்களைப் பொறுத்தளவில் காணிப் பிரச்சினை என்பது முதன்மையான ஒன்றாக இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
- "நாங்கள் உண்மையில் சிறிலங்கா இராணுவப் படைக்கு எதிரானவர்கள் அல்லர். 1983ல் பலாலியில் சிறிலங்காப் படையினர் முகாமிட்டனர். இதேபோன்றே வவுனியாவிலும் முகாமிட்டனர். இந்நிலையில், இவ்வாறு சிறிலங்கா இராணுவத்தினர் தொடர்ந்தும் முகாங்களை அமைத்தால் 1983 போன்று நிலைப்பாடு மாறிவிடும்" எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் எச்சரித்துள்ளார்.
- "சிறிலங்கா அரசாங்கமானது தொடர்ந்தும் நாட்டின் வடக்கு, கிழக்கில் தனது படைகளைக் குவித்து, அங்கே நில ஆக்கிரமிப்பை மேற்கொண்டு, பௌத்தர்களே இல்லாத தமிழர் வாழிடங்களில் புத்தவிகாரைகளை அமைத்தால், சிறிலங்கா அரசாங்கத்துடன் பேசுவதில் எவ்வித பயனுமில்லை என தமிழ் மக்கள் நினைக்கலாம். ஆகவே இந்நிலை நீடித்தால், தமிழ் மக்களைப் பொறுத்தளவில் இந்த நாட்டை விட்டு வெளியேறுதல் அல்லது மீண்டும் அரசாங்கத்துடன் யுத்தத்தில் ஈடுபடுதல் ஆகிய இரண்டு தெரிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவர்" எனவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனுடன் 'Asian Tribune' ஊடகம் மேற்கொண்ட நேர்காணலினை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி விபரம் வருமாறு:
கேள்வி: கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது போட்டியிடவுள்ளதா?
பதில்: நாங்கள் போட்டியிடவுள்ளோம்.
கேள்வி: சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் கூட்டுச்சேர விரும்புகிறீர்களா?
பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே நாம் கொண்டுள்ள ஒரேயொரு கூட்டணிக் கட்சியாகும். எனது அறிவிக்கெட்டிய வரையில், முஸ்லீம் காங்கிரஸ் கட்சியானது சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகித்துள்ளது.
கேள்வி: சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது கூட்டுச்சேரவுள்ளதாக சில அறிக்கைகள் கூறுகின்றன?
பதில்: ஆம், நாங்கள் கூறினோம். ஆனால் இது முஸ்லீம் காங்கிரஸ் கட்சியிலேயே தங்கியுள்ளது.
கேள்வி: நீங்கள் அவர்களுடன் தொடர்பைப் பேணியுள்ளீர்களா?
பதில்: ஆம், நாங்கள் எமது வேண்டுகோளை அவர்களுக்கு அனுப்பியிருந்தோம். நாங்கள் அவர்களிடம் எமது நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துக் கூறினோம். இது தொடர்பாக அவர்கள் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
கேள்வி: மீள்குடியேற்றம் தொடர்பில் நீங்கள் அண்மையில் திருமுறிகண்டியில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தீர்கள். மீள்குடியேற்றம் தொடர்பான இறுதி நிலவரம் என்ன?
பதில்: சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்தும் நில அபகரிப்பு நடைபெற்று வருகின்றது. வடக்கைப் பொறுத்தளவில், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பானது சிறிலங்கா இராணுவப் படைகளால் அபகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலங்களை அவர்கள் தமது சொந்தப் பயன்பாட்டுக்காக சுவீகரித்துள்ளனர். அரச மற்றும் தனியார் காணிகளை சிறிலங்கா இராணுவம் அபகரித்து வருகின்றது.
திருமுறிகண்டி கிராமத்தைப் பொறுத்தளவில், அங்குள்ள அனைத்துக் காணிகளும் மக்களுக்குச் சொந்தமானதாகும். இந்நிலையில் இந்த மக்கள் தமது சொந்தக் கிராமத்துக்குச் செல்ல விரும்புகின்றனர். ஜெனீவா சாசனத்தின் பிரகாரம், இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் மீளத் திரும்புவதற்கு உரிமை உண்டு. ஆனால், இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதாக சிறிலங்கா அரசாங்கமானது உலக நாடுகளிடம் கூறுகின்றது. இருப்பினும், திருமுறிகண்டி வாழ் மக்கள் தமது சொந்தக் கிராமத்துக்கு மீண்டும் சென்று வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் வழங்கவில்லை. இந்நிலையிலேயே சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். இதேபோன்று யாழ்ப்பாணம், மன்னார் போன்ற இடங்களிலும் சிறிலங்கா அரசாங்கம் நில அபகரிப்பில் ஈடுபட்டு வருகின்றது.
கேள்வி: மன்னாரில் நடந்தது என்ன?
பதில்: மன்னார் மாவட்டத்தின், முசலி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் என்னும் கிராமம் முழுவதையும் சிறிலங்கா கடற்படையினர் தம்வசம் வைத்துள்ளனர். இக்கிராமமானது கடற்கரையை அண்டிய ஒரு கிராமமாகும். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் குடியேறுவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. முள்ளிக்குளக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்து சென்ற போது, சிறிலங்கா கடற்படையினர் இக்கிராமத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர். இங்கு பல முகாங்கள் உள்ளன. தற்போது இவர்கள் தமது குடும்பங்களையும் இங்கு கொண்டுவந்துள்ளனர்.
முள்ளிக்குளக் கிராமத்தைச் சேர்ந்த இந்த ஏழை மக்கள் தற்போது வாழ்வதற்கு இடமில்லாது தவிக்கின்றனர். இதனால் அவர்கள் காட்டில் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். காட்டில் வாழும் இந்த மக்களுக்கு சரியான வசதி வாய்ப்புக்களை சிறிலங்கா அரசாங்கம் வழங்க முன்வரவில்லை.
இதேபோன்று மன்னார் மாவட்டத்தின் சன்னார் போன்ற சில இடங்களையும் இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இங்கு மிகப் பரந்த தேசத்தில் இராணுவ முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், யாழ்ப்பாண மாவட்டங்களில் சில பிரதேசங்களை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இதனால் இங்கு வாழும் மக்கள் பல்வேறு இடர்களை சந்திக்கின்றனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் மக்களின் வீடுகள் பலவற்றை அபகரித்துள்ளனர். தெல்லிப்பளைப் பிரதேசத்தில் 24 கிராமசேவகர் பிரிவுகளில் கடந்த 25 ஆண்டுகளாக மக்கள் வாழ்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளன. மாதகலின் திருவடிநிலையம் என்கின்ற இடத்திலும் சிறிலங்கா கடற்படையினர் பல முகாங்களை அமைத்துள்ளனர்.
கேள்வி: தங்களால் மேற்கொள்ளப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டங்கள் தொடர்பாக விரிவாக விளக்குவீர்களா?
பதில்: சத்தியாக்கிரகம் என்பது ஜனநாயக ரீதியான ஆர்ப்பாட்டமாகும். நாங்கள் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் மூலம் அரசாங்கம் மீதான எமது கோபத்தை வெளிப்படுத்துகிறோம். அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்துக்கு எடுத்துக் கூறி இவற்றைத் தீர்ப்பதற்கான அழுத்தத்தை வழங்குவதற்காகவே நாம் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை நடாத்துகின்றோம். 'பல நூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களை விரைவில் குடியேற்ற வேண்டும். அத்துடன் இவர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு இவர்களைக் குடியேற்ற வேண்டும்' என்பதை அரசாங்கத்துக்கு வலியுறுத்திக் கூறுகின்றோம்.
கேள்வி: பிரிக்கப்படாத ஐக்கிய சிறிலங்கா தொடர்பில் நீங்கள் நம்பிக்கை கொள்கிறீர்களா?
பதில்: நாங்கள் மீண்டும், மீண்டும் இது தொடர்பாக வலியுறுத்திக் கூறிவருகிறோம். 'எமது பிரச்சினைகளை ஐக்கிய சிறிலங்காவுக்குள் தீர்த்துக் கொள்ள நாம் விரும்புகிறோம்' என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு.சம்பந்தன் அவர்களும் பல தடவைகள் எடுத்துக்கூறியுள்ளார். ஆகவே 'நாங்கள் ஐக்கிய சிறிலங்காவுக்குள் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதில் நம்பிக்கை கொள்கின்றோமா?' என மீண்டும் மீண்டும் வினவுவதில் எவ்வித பயனுமில்லை. தமிழ் மக்கள் மிகச் சாதரணமாக சிறிலங்கா அரசாங்கத்தால் ஓரங்கட்டப்படுகின்றனர்.
சிறிலங்கா அரசாங்கமானது தொடர்ந்தும் நாட்டின் வடக்கு, கிழக்கில் தனது படைகளைக் குவித்து, அங்கே நில ஆக்கிரமிப்பை மேற்கொண்டு, பௌத்தர்களே இல்லாத தமிழர் வாழிடங்களில் புத்தவிகாரைகளை அமைத்தால், சிறிலங்கா அரசாங்கத்துடன் பேசுவதில் எவ்வித பயனுமில்லை என தமிழ் மக்கள் நினைக்கலாம். ஆகவே இந்நிலை நீடித்தால், தமிழ் மக்களைப் பொறுத்தளவில் இந்த நாட்டை விட்டு வெளியேறுதல் அல்லது மீண்டும் அரசாங்கத்துடன் யுத்தத்தில் ஈடுபடுதல் ஆகிய இரண்டு தெரிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவர்.
கேள்வி: மீண்டும் யுத்தம் செய்வது என கூறுவதன் அர்த்தம் என்ன?
பதில்: மறைந்த திரு.எஸ்.ஜே.வி செல்வநாயகம் அவர்கள் முன்னைய அரசாங்கங்களுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காகப் போராடினார் என்பது நன்கறிந்ததே. இதனைத் தொடர்ந்து அடுத்த முப்பது ஆண்டுகளாக ஆயுதப் போராட்டம் நீடித்தது. இந்நிலையில், தற்போது சிறிலங்கா அரசாங்கமானது தமிழ் மக்களின் உரிமைகளை மீண்டும் பெற்றுக் கொடுப்பது தேவையில்லை எனக்கருதினால், நாங்கள் எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகளை ஆராய்ந்து கொள்ளவேண்டும்.
இந்த அடிப்படையில், தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆள விரும்புகின்றனர். அவர்கள் தமது சொந்த இடங்களை அபிவிருத்தி செய்ய விரும்புகின்றனர். அவர்கள் தமக்கான சொந்தப் பாதுகாப்பை தாமே வழங்க விரும்புகின்றனர். அவர்கள் தமது பிள்ளைகளின் கல்வி, அவர்களது பொருளாதார வளர்ச்சி மற்றும் ஏனைய அனைத்தையும் தாமே கவனித்துக் கொள்ள விரும்புகின்றனர். தமிழ் மக்களுக்கான உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டால் அவர்கள் தாம் விரும்பியபடி தமக்கான வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும்.
சுவிற்சர்லாந்து, இந்தியா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற பல உலக நாடுகளில் பல்வேறு இனத்து மக்கள் வாழ்கின்றனர். ஆனால் இந்த நாடுகளில் அனைத்து இனமக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கும், மாநில அளவில் அவர்கள் தமது பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கும் ஏற்ற வகையில் அரசியலமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நாடுகளைப் போன்றதொரு அதிகாரப் பகிர்வை சிறிலங்கா அரசாங்கம் ஏன் உருவாக்க முடியாது?
கேள்வி: சிறிலங்கா அரசாங்கமானது வடக்கு மற்றும் கிழக்கில் புரியும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் திருப்தி கொள்கிறீர்களா? இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் சிறிலங்கா அரசாங்கமானது தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள முடியுமா?
பதில்: இல்லை....ஏனெனில் தமிழ் மக்கள் மிக மோசமான பாதிப்புக்களைச் சந்தித்துள்ளனர்.
01. அவர்கள் தமது சொந்த நிலங்களுக்கு மீண்டும் செல்ல விரும்புகின்றனர். 02. அவர்கள் தமது வீடுகளை நிர்மாணிப்பதற்கு உதவிகளை வேண்டிநிற்கின்றனர். 03. இந்த மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை கோரிநிற்கின்றனர்.
கெட்டவாய்ப்பாக, இந்த மக்களின் இவ்வாறான அடிப்படைப் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை. ஆனால் சிறிலங்கா அரசாங்கமானது நெடுஞ்சாலைகளை மட்டும் அமைத்துவருகின்றது. இந்த நெடுஞ்சாலைகள் மூலம் சிறிலங்காப் படைகள் இலகுவாக போக்குவரத்தை மேற்கொள்ள முடியும்.
எதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தமிழர்கள் தாமே தீர்மானித்துக் கொள்வதற்கான அனுமதி வழங்கப்படுவது சிறந்ததாகும். தமிழர்கள் தமக்கான அபிவிருத்திப் பணிகளை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும். இதனை சிறிலங்கா அரசாங்கம் ஏன் தீர்மானித்துக் கொள்ளவேண்டும்?
உண்மையில் இவ்வாறான நடவடிக்கைகள் சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து மேலும் மக்களை ஓரங்கட்டுகின்றது. இவ்வாறான நிலைப்பாடு தொடர்ந்தால் தமிழ் மக்களின் மனங்களை சிறிலங்கா அரசாங்கத்தால் வெற்றி கொள்ள முடியாது.
நாடாளுமன்றத் தேர்தல்கள் மற்றும் உள்ளுராட்சி சபைக்கான தேர்தல்கள் போன்றன இதற்கான சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும். இத்தேர்தல்களில் தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமக்கான வாக்குகளை வழங்கினர் என்பதை அனைவரும் கருத்திலெடுக்க வேண்டும்.
தமிழ் மக்கள் தமக்கான அரசியல் அதிகாரப் பகிர்வை வேண்டி நிற்கின்றனர். அவர்கள் அரசியற் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதில் உறுதியாக உள்ளனர். அவர்கள் தம்மைத் தாமே ஆள்வதை விரும்புகின்றனர். தமிழர்களின் இந்நிலைப்பாட்டை சிறிலங்கா அரசாங்கத் தலைவர்கள் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்
|
|
|