|
|
| பௌத்த விகாரைகள் பற்றிய கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் திணறல் |
| [ புதன்கிழமை, 11 யூலை 2012, 06:44 GMT ] [ தா.அருணாசலம் ] |
வடக்கில் பௌத்தர்கள் வசிக்காத பகுதிகளில் புதிதாக பௌத்த விகாரைகளை சிறிலங்காப் படையினர் அமைத்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளிக்க முடியாமல், சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் திணறியுள்ளார்.
‘ஏசியன் ரிபியூன்‘ இணைத்தளம் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரியவை செவ்வி கண்டுள்ளது.
இந்தச் செவ்வியில், “வடக்கில் பௌத்தர்கள் வசிக்காத இடங்களில் கூட பௌத்த வழிபாட்டு சின்னங்களும், பௌத்த ஆலயங்களும் அமைக்கப்படுவது குறித்து பொதுமக்கள் கவலை கொள்வதாக அறிகிறோம்.
இது அங்குள்ள மக்களின் விருப்பத்துக்கு மாறானது. சிறிலங்கா இராணுவத்தினர் தமது வழிபாட்டுக்காக பௌத்த ஆலயங்களை அமைப்பதானால், அதை முகாமுக்குள்ளேயே அமைக்கலாம்.
எதற்காக தனியார் காணிகளில் அத்துமீறி அமைக்கிறீர்கள்?” என்று பிரிகேடியர் ருவான் வணிகசூரியவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு அவர், "எங்கே அவ்வாறு கட்டப்பட்டுள்ளது?" என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையடுத்து, “ஏ 9 வீதியில் மதவாச்சியில் இருந்து யாழ்ப்பாணம் வரை புதிய பௌத்த ஆலயங்கள் சடுதியாக முளைத்துள்ளதை காணலாம். நான் பலமுறை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்குப் பயணம் செய்துள்ளேன்.
என்னால் அத்தகைய பௌத்த ஆலயங்களை காணமுடிந்தது. சாவகச்சேரியில் தனியார் காணி ஒன்றில் சிறிலங்கா காவல்துறையினர் பௌத்த விகாரை ஒன்றை அமைக்க முயற்சிக்கின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனை செவ்வி கண்டபோது, சிறிலங்காப் படையினர் பௌத்தர்கள் இல்லாத இடங்களில் பௌத்த ஆலயங்கள் அமைக்கப்படுவதாக கூறியிருந்தார்” என்று ‘ஏசியன் ரிபியூன்‘ பதிலளித்துள்ளது.
இதற்கு, பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, “இந்த விவகாரம் தொடர்பாக குறிப்பிட்ட விபரங்கள் இல்லாமல் பதிலளிக்க முடியாது.
இராணுவத் தளபதியின் கவனத்துக்கு இதைக் கொண்டு செல்கிறேன்“ என்று மழுப்பியுள்ளார்.
அதேவேளை, யாழ்ப்பாணக் குடாநாட்டில் படையினரின் எண்ணிக்கை தற்போது 50 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
“2007இல் போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது, யாழ். குடாநாட்டில், சிறிலங்கா இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் காவல்துறை என மொத்தம் 50 ஆயிரத்துக்கும் சற்றுக் குறைவான படையினர் நிலை கொண்டிருந்தனர்.
தற்போது 15 ஆயிரம் சிறிலங்கா இராணுவத்தினரே அங்கு உள்ளனர். கடற்படை, விமானப்படையினரும் குறைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, மொத்தம் 18 ஆயிரம் ஆயுதப்படையினரே, யாழ். குடாநாட்டில் நிலை கொண்டுள்ளனர்.
சிறிலங்கா இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள வீடுகள், நிலங்களின் உரிமையாளர்கள், பலாலிப் படைத்தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு தமது சொத்துகளுக்கான வாடகையைக் கோர முடியும்.
உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள வீடுகள், நிலங்களின் உரிமையாளர்கள் கூட தமது ஆவணங்களுடன் சென்று சொத்துகளை அடையாளம் காட்டி அவற்றுக்கு வாடகை கோர பெறமுடியும்.
நாம் அவற்றுக்கு வாடகை வழங்குவோம். விரைவில் சுமார் 200 தொடக்கம் 300 வரையான வீடுகளை பொதுமக்களிடம் ஒப்படைக்கவுள்ளோம்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். |
|
|