|
|
| மன்னார் தீவில் மீள்குடியேறிய தமிழ்மக்கள் சிறிலங்கா இராணுவத்தால் விரட்டியடிப்பு |
| [ புதன்கிழமை, 27 யூன் 2012, 07:03 GMT ] [ வவுனியா செய்தியாளர் ] |
சிறிலங்காவின் வடக்கே மன்னார் தீவில் இரு வாரங்களுக்கு முன்னர் மீள்குடியேறிய 45 கத்தோலிக்க, தமிழர்கள் அவர்களது சொந்த நிலங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதுடன், இவர்கள் தமது சொந்த வீடுகளில் மீள்குடியேறுவதற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவையெனவும் இராணுவத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.
2008ல் தொடரப்பட்ட யுத்தத்தின் விளைவால் இந்த மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்திருந்தனர். இவர்களது மீள்குடியேற்றம் தொடர்பாக தமக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் தம்மிடம் கூறியதாக, கிராமத்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
"நள்ளிரவுக்கு முன்னர் எம்மை எமது சொந்த வீடுகளை விட்டு வெளியேறுமாறு இராணுவத்தினர் கட்டளையிட்டனர். இதனால் நாங்கள் எமது பிள்ளைகளுடன் ஐந்து கிலோமீற்றர் தூரம் வரை நடந்து இத்தேவாலயத்தை வந்தடைந்தோம்" என பியஸ் ஆனந்தகுமார் அசுந்தா தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் தொடரப்பட்;ட உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் 448,000 வரையான மக்கள் இடம்பெயர்ந்ததாகவும், இவர்களில் 6000 பேர் வரை தற்போதும் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாகவும் மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் ஐ.நா அமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
"நாங்கள் எமது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டது தொடர்பாக கத்தோலிக்க மதகுருமார்கள் அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர். யூன் 27ம் நாளுக்கிடையில் வீடுகளை மீளக் கையளிப்பதாக உறுதிவழங்கப்பட்டுள்ளது" என சொந்த வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தற்காலிகமாக தங்கியுள்ள பேசாலை தேவாலய கத்தோலிக்க மதகுருவான அவிதாப்பர் விக்ரன் சவிரி அடிகளார் தெரிவித்துள்ளார்.
தமது பகுதியைச் சேர்ந்த மக்கள் அவர்களது இடங்களில் மீள்குடியேற்றப்படுவதற்கு முன்னர், அக்குடும்பங்கள் தொடர்பான முழுவிபரங்களையும் தேவாலய நிர்வாகம் சிறிலங்கா இராணுவத்திடம் கையளிக்கும் எனவும் சவிரி அடிகளார் மேலும் தெரிவித்துள்ளார்.
இத்தேவாலயத்துக்கு சொந்தமான நிலத்தில், வெற்றிமண் வீட்டுத் திட்டத்தின் கீழ் கத்தோலிக்க தொண்டர் அமைப்பான இயேசு அகதிகள் சேவை 50 வீடுகளை நிர்மாணித்திருந்தது. இவ்வீடுகள் 2006ல் மக்களிடம் கையளிக்கப்பட்டன.
நிலங்களின் உரிமையாண்மையை உறுதிப்படுத்தி அவற்றைப் பதிதல் என்பது சிறிலங்காவின் வடக்கில் ஒரு வெற்றிகரமான முதலீடு மற்றும் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும், இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றத் தாம் தயாராக இருப்பதாகவும் சிறிலங்காத் தீவில் மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதில் இது முக்கிய பங்கு வகிப்பதாகவும், சிறிலங்காவுக்கான ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட இயக்குனர் டக்ளஸ் கே தெரிவித்துள்ளார்.
செய்தி வழிமூலம் : ucanews.com reporter, Mannar |
|
|