|
|
| அவுஸ்ரேலிய கடற்பரப்பில் மீட்புப் பணிகள் தொடர்கிறது - 3 சடலங்கள் மட்டும் மீட்பு |
| [ வெள்ளிக்கிழமை, 22 யூன் 2012, 01:35 GMT ] [ கார்வண்ணன் ] |
கிறிஸ்மஸ் தீவுக்கு அப்பால் கடலில் மூழ்கிய அகதிகள் படகில் இருந்தவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
உயிர் தப்பியோரை மீட்க இன்னமும் வாய்ப்புகள் உள்ளதாக அவுஸ்ரேலிய அதிகாரிகள் இன்றுகாலை கூறியுள்ளனர்.
இதுவரை 13 வயதுச் சிறுவன் உள்ளிட்ட 110 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கிறிஸ்மஸ் தீவில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள கடல் பகுதியில் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக இன்றுகாலை தகவல் வெளியிட்ட அவுஸ்ரேலிய உள்துறை அமைச்சர் ஜாசன் கிளேர்,
“விபத்து நடந்த கடல்நீரின் வெப்பநிலை 29 டிகிரியாக உள்ளது.
கடலில் அலைகள் தீவிரமாக இல்லை. அரை மீற்றர் தொடக்கம் 1.25 மீற்றர் வரையே அலைகள் எழுகின்றன.
உயிர்காப்பு அங்கியுடன் அல்லது ஏதேனும் மிதக்கும் பொருளின் உதவியுடன் 36 மணிநேரம் வரையில் இந்த சூழ்நிலையில் உயிர்வாழ முடியும். எனவே, மேலும் பலரைக் காப்பாற்றுவதற்கு சாத்தியங்கள் உள்ளன.
மேலும் பல உயிர்களைக் காப்பாற்ற நாம் முயற்சிக்கிறோம்.
மூழ்கிய படகின் மீது இருந்த 40 பேர் மீட்கப்பட்டனர்.
ஏனையவர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டு படகு மூழ்கிய இடத்தில் இருந்து 3 கடல்மைல் தொலைவில் மீட்கப்பட்டுள்ளனர்.
மீடபுப்பணிகளுக்கு இந்தோனேசியாவும் உதவுகிறது.
இந்தத் தேடுதல் அவுஸ்ரேலியக் கடற்படைக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் 4 வணிகக் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அவுஸ்ரேலியக் கடற்படைக் கப்பல் மீட்ட 110 பேரில் பலர் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் கிறிஸ்மஸ்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்துக் குறித்து அறிந்ததும் அவுஸ்ரேலிய விமானப்படை விமானம் ஒன்று நேற்றுமாலை 5 மணியளவில் சம்பவ இடத்துக்குச் சென்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு உயிர்காப்பு அங்கிகளை வீசியது.
குறுகிய நேரத்தில் 4 வணிக கப்பல்களும், 2 கடற்படைக் கப்பல்களும் அந்த இடத்தை அடைந்தன.
நேற்றிரவு மேலதிக விமானங்கள் உதவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மிகவும் விசாலமான கடற்பரப்பில் தேடுதல்களை நடத்த வேண்டியுள்ளது.
கிழக்குத் திமோருக்கு அப்பால் இன்னொரு படகு மூழ்கியதாக வெளியான தகவல் தவறானது.
அந்தப் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல்களில் இது உறுதியாகியுள்ளது. அங்கு தேடுதல்கள் நிறுத்தப்பட்டு விட்டன.“ என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்த விபத்தில் 90 பேர் உயிரிழந்திருக்கலாம் அல்லது காணாமற் போயிருக்கலாம் என்று அவுஸ்ரேலிய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை, கவிழ்ந்த படகு இன்னமும் மிதந்து கொண்டிருப்பதை காணமுடிவதாக தேடுதலில் ஈடுபட்டுள்ள விமானங்களின் விமானிகள் இன்று காலை தகவல் அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையே, கடலில் மூழ்கிய அகதிகள் படகு தொடர்பாக கன்பரா மற்றும் ஜகார்த்தாவில் உள்ள சிறிலங்கா தூதரகங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
பிந்திய செய்தி
கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே நேற்று மூழ்கிய அகதிகள் படகு சிறிலங்காவில் இருந்த புறப்படவில்லை என்று சற்று முன்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உயிருடன் மீட்கப்பட்டவர்கள் கிறிஸ்மஸ்தீவுக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து இந்தப் படகு இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்டது தெரியவந்துள்ளது.
முன்னதாக இந்தப் படகு சிறிலங்காவில் இருந்து புறப்பட்டிருக்கலாம் என்று அவுஸ்ரேலிய அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருந்தனர்.
அத்துடன் இந்தப் படகில் சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்ததாகவும் தகவல் இல்லை.
ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான் நாட்டவர்களே இதில் பயணம் செய்துள்ளனர் என்றும் பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. |
|
|